Thursday, November 27, 2014

காற்றே...
என்னைக்
கடந்து போகிறாயா...? போ... போ...
தயவுசெய்து
என்மீது நடந்து போகாதே...
நான்
ஏற்கனவே நொந்துபோயிருக்கிறேன் !

கண்ணே...
நீ
தென்றலாக வரவேண்டாமடி
தீயாக வந்து
சுட்டுவிட்டாவது போ...
தொட்டுப் பார்த்தாவது
ஆறுதலடைகிறேன் !

     000000000

ஆம்....
அவள் கைகளைத்தான்
கழுவிக்கொண்டிருக்கிறாள்....
கைகளைக்
கழுவிவிட்டு வந்தா
கட்டியணைக்கப்போகிறாள்
என்னைக்
கைகழுவிவிட்ட பிறகு ?

      0000
கண்மணியே  நானின்னும்  சாக  வில்லை
   காய்ந்திட்ட  சருகாக  இருக்கின்  றேனே
உன்னினைவில்  எரிகின்றேன்  எண்ணெய்  தீர்ந்தால்
   ஒளியிழந்த  விளக்காவேன்  அணைந்தே  போவேன்
என்நினைவோ  உனக்கிருந்தால்  உயிரே  என்னை
   எடுத்தே நீ   அணைத்துக்கொள் ; இல்லை  என்றால்
தன்னுடலை  இழந்திட்ட   உயிராய்   ஆவேன்
   தளிர்கொடியே...  எனையிழப்பாய்   உண்மை !  உண்மை !

அவளில்லா  இடமெனக்கோ  சோகக்  காடே
   அவளின்றி   போனாலோ  வேகும்  கூடே
அவளின்றி  என் கிழக்கில்  உதயம்  உண்டோ
   அவளின்றி  என் வாழ்க்கை  உயிர்பெ  றாதே..
சவமென்றே  கிடப்பதற்கா  இந்த  வாழ்க்கை
   சாரமற்ற  உப்பினை யார்  மதிக்கக்  கூடும்
அவளின்றி  எனக்கிங்கே  எதுவும்  இல்லை
   அவளுடனே  வாழ்வதொன்றே  என்றும்  இன்பம் !

தேடிவந்தேன்  குலமகளைக்  காண   வில்லை
   தேவமகள்  போனவழி   தெரிய  வில்லை
நாடிவந்தேன்  அவளன்பும்  கிட்ட  வில்லை
   நல்லதென்றே  எனக்குமிங்கே எதுவும்  இல்லை
கூடிழந்தே  கூவுகின்ற  பறவை  யானேன்
   கொடுந்துன்பம்  எனைத்தின்னும் கொடுமை கண்டேன்
நாடிழந்த   ஈழமக்கள்  துன்பம்  கண்டார்
   நானிங்கே  காண்பதுவோ  பிரிவின்  துன்பம் !


No comments:

Post a Comment